• 04865-231375
  • gatpschoolmunnar@gmail.com

Anglo Tamil Primary School

By - Dr. Arumugam Singapore
Gatps Munnar

1912-1919-ல் மதராஸ் கவர்னராக இருந்த ஸ்காட்லாண்டின் மாண்பு மிகு லார்ட் பெண்ட்லாண்ட், மதராஸ் மாகாணத்தில் சமூக மாற்றம் ஏற்படவும், அனைவரும்  ஆங்கிலம் கற்றுக் கொள்ள, ஆங்கில கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும், மாணவர்களுக்கு மதிய உணவுடன் கூடிய பள்ளிகளையும் முதன் முதலில் மதராசில் திறந்தார்.

இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பயிற்சி பெற்று,  சிறப்பகத் தேர்ச்சி பெற்றவர் திருநெல் வேலியைச் சேர்ந்த Y. ஞானமாணிக்கம். மதராஸ் கவர்னராக இருந்த  மான்பு மிகு லார்ட் பெண்ட்லாண்ட் அவர்கள் 1916-ல் ஹைரேஞ்ச் கிளப்புக்கு விஜயம் செய்த பொழுது மூணார் Anglo Tamil Primary School கட்டுவதற்கு அனுமதி வழங்கினார்.

கற்றல் நோக்கமாக இருக்கும்போது, ​​படைப்பாற்றல் மலரும். படைப்பாற்றல் துளிர்விடும்போது சிந்தனை வெளிப்படுகிறது. சிந்தனை வெளிப்படும் போது, ​​அறிவு முழுமையாக ஒளிரும். அறிவு ஒளிரும் போது பொருளாதாரம் செழிக்கும். - Dr. APJ Abdul Kalam

இரண்டு வருடங்களுக்குப் பின்பு 1918-ம் வருடம் மே மாதத்தில் வெறும் 16 குழந்தைகளுடன் பள்ளிக் கூடம் தொடங்கப் பட்டது என்று அந்த வகுப்பில் சேர்ந்து படித்த அபிக் கங்காணியின் மூத்த மகன் பரமசிவன் த‌ன்னுடைய மக்களிடம் பகிர்ந்துள்ளார். அந்தப் பள்ளிக்கு மதராசில் ஆங்கில ஆசிரியராகத் தேர்ச்சி பெற்ற Y. ஞானமாணிக்கம் அவர்களை மூணார் Anglo Tamil Primary School -ன் முதல் ஹெட் மாஸ்டராக பிரிட்டிஷார் நியமித்தனர்.

திரு Y. ஞானமாணிக்கம் அவர்கள் இங்கிலாந்து வெள்ளைக் காரர்களின் ஆங்கில உச்சரிப்பை மிகத் தெளிவாகக் கற்றவர். எப்பொழுதும் கோட், பேண்ட், டையுடன் மிக நேர்த்தியாக உடை உடுத்துபவர். தினமும் ஷூவுக்கு பாலீஷ் போட்டு பளபளவென்று வருவார். ஞாயிற்றுக் கிழமை மட்டும் வெள்ளை நிற ஷூவும் கருப்பு நிற கோட்டு-பேண்ட் போட்டு சர்ச்சுக்கு வருவார் என்று கூறுவார்கள். அக்காலத்தில் இவரை கருப்புத் துரை என்று அழைப்பார்கள். டீச்சர்களும், மாணவர்களும் ஸ்கூலில் இங்கிலீசில்தான் பேச வேண்டும், மீறினால் எல்லோருக்கும் பிரம்பு அடிதான்.

அக்காலத்தில் Anglo Tamil Primary School ல் நாலாம் கிளாஸ் வரைதான் இருந்தது. வெள்ளைக்காரர்களின் நிர்வாகத்தில் இருந்ததால் இங்கிலீசுக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். தற்பொழுது உள்ள கான்வெண்ட் ஸ்கூல்களை விட Anglo Tamil Primary School ல் இங்கிலீஷ் போதனை மிக சிறப்பாக இருந்தது. திரு Y. ஞானமாணிக்கம் அவர்கள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஹைரேஞ்ச் கிளப்புற்குப் போய் வெள்ளைக்கார மேனேஜர்களுக்குத் தனியாகத் தமிழ் டியூஷன் எடுப்பார். இவருடைய மகன்களில் முக்கியமான ஒருவர் G. வின்செண்ட் ரைட்டர்.

இது மட்டுமல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மூணார் எஸ்டேட் தொழிலாளர்களின் லைன் வீடுகளுக்கு சென்று பெண் தொழிலாளிகளை சந்தித்து, அவர்களுடன் லைன் வீட்டில் உட்கார்ந்து தேயிலைத் தண்ணீர் குடித்து விட்டு, குழந்தைகளை Anglo Tamil Primary School க்கு அனுப்பினால், பிற்காலத்தில் நல்ல வேலைக்கு சேர்க்க நான் உத்திரவாதம் என்று சொல்லுவார். “ஐயா அது துரைமார் மற்றும் ஐயாக்களின் பிள்ளைகள் படிக்கும் ஸ்கூல், எங்க பிள்ளைகள் எப்படிப் படிக்க முடியும்” என்று பலரும் கேள்வி கேட்பார்கள்.

இவருடைய அறிவுரைகளை ஏற்று பலத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய  மக்களை Anglo Tamil Primary School ல் சேர்த்து நாலாம் கிலாஸ் வரையிலும் இங்கிலீஷ் படிக்க வைத்தார்கள். பல பேரையும் துரைமார்களிடம் இங்கிலீஷ் பேசும் அளவுக்கு உருவாக்கியவர் ஹெட்மாஸ்டர் Y. ஞானமாணிக்கம் அவர்கள்தான்.  பலரின் வாரிசுகளும் பெரிய படிப்புகள் படித்து பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். இதன் முதற் படியை எடுத்து வைக்க உதவியவர் மனித ரூபத்தில் வந்த தெய்வம், மூணார் ஆங்கிலோ தமிழ் பிரைமரி  ஸ்கூலின் முதல் ஹெட் மாஸ்டர் திரு Y. ஞானமாணிக்கம் அவர்கள்.

1918 முதல் 1953 வரையிலும் 36 வருடங்களாக பிரிட்டிஷாரின் நிர்வாகத்தின் கீழ் Anglo Tamil Primary School (A.T.P.S.) என்னும் பெயரில் செயல் பட்டு வந்த பள்ளி நிர்வாகம், 1954 முதல் கேரள அரசுக்கு சொந்தமாகி Government Anglo Tamil Primary School (G.A.T.P.S.)  என்று பெயர் மாற்றப் பட்டது.

அக்காலத்தில் மூணாரில் வாழ்ந்து வந்த இசைப் பிரியர்கள், திரு. இராகவ ஐயர் தலைமையில் ஒவ்வொரு வருடமும் மதராஸ் கிருஷ்ண கான சபா மூலம் மார்கழி மாதம் முழுவதும் பிரபலமான கர்நாடக சங்கீத கலைஞர்களை அழைத்து வந்து A.T.P.S. ஸ்கூலில் இரவு நேரக் கச்சேரிகள் நடத்துவது வழக்கம். இங்கு வந்து கலந்து கொண்ட பலர் உலகப் புகழ் பெற்ற கலைஞர்களாகப் புகழ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இங்கு ஆரம்பக் கல்வியைக் கற்றவர்கள் உலகம் முழுவதும் பெரிய அதிகாரிகளாக பணி புரிந்து வருவது இந்தப் பள்ளியின் சிறப்பு.

Scroll to top